இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் எங்காவது சந்தித்து கொண்டால் அவர்கள் தாய் மொழியில் தான் பேசுவார்கள். இத்தனைக்கும் தெலுங்கு, மலையாளம் எல்லாம் தமிழிலிருந்து சென்றவை தான் இருந்தாலும் கூட மலையாளிகளோ தெலுங்கர்களோ எங்காவது சந்தித்து கொண்டால் அவர்கள் தாய் மொழியில் தான் பேசுவார்கள். ஆனால் உயர்தனிச்செம்மொழி என்று வர்ணிக்கப்படும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தமிழ் பேசுவதையே கேவலமான செயலாக கருதுகின்றனர்.
சரி மொழிபற்றில் தான் இப்படி மக்களுக்குள்ளவது ஒற்றுமையாக இருகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. ஒரு தமிழன் முன்னேறிவிட்டால் அதை பார்த்து பொறாமை படுவதில் முதல் ஆளாக இன்னொரு தமிழன் இருக்கிறான். இப்படி இருந்த தமிழகத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் சேர்ந்து போராடிய ஒன்று தான் இலங்கை தமிழர் பிரச்சனை பலர் இறங்கி போராடாவிட்டாலும் அவரவர் மனதிலாவது இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு பெறவேண்டும் என்று நினைத்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மக்களிடமே இந்த எண்ணம் வந்தாலும் தமிழ் நாட்டை ஆளும் அரசியல் வாதிகளுக்கு இந்த எண்ணம் துளியும் இல்லை என்பது சமீபத்தில் அவர்கள் செய்யும் செயலை பார்த்தால் தெளிவாக தெரிகிறது.
இலங்கையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த இடங்களை தடம் தெரியாமல் அழித்து வருகிறார் ராஜபக்சே. இந்நிலையில் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூரில் இலங்கை போரில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களையும் கொடுமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்றை அமைத்தார் பழநெடுமாறன் அவர்கள். அந்த நினைவு முற்றம் போரில் தமிழர்கள் பட்ட வேதனையை எதிர்காலதமிழர்களுக்கும் நினைவு படுத்தும் வகையில் நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.
தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக ஒரு நல்லது செய்தால் அதை தடுப்பதற்கு தான் தமிழகத்தில் ஒரு கூட்டமே இருகிறதே அது எப்படி இந்த நினைவு முற்றத்தை மட்டும் விட்டுவிடும். நடராஜன் என்பவரின் மீது உள்ள தனிப்பட்ட பகையினை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் மீது காட்டியுள்ளது தமிழக அரசு. இலங்கையில் ராஜபக்சே செய்த அதே போன்றதொரு செயலை தான் இங்கு தமிழக அரசும் செய்திருக்கிறது. இவற்றை பார்க்கும்போது தான் எனக்கு "இது தமிழ்நாடா இல்லை இலங்கையா?" என்று கேட்கதோன்றுகிறது.
தமிழர்களுக்காக போராடுதல், தமிழர்களை பெருமை படுத்தும் வகையில் செயல்களை செய்தல் போன்றவை இலங்கையில் தான் முடியாது ஆனால் இன்று தமிழ் நாட்டிலும் அதே நிலை இருப்பது வருத்தத்திற்குரியது. இலங்கை தமிழர்களுக்காக போராடிய லயோலா கல்லூரி மாணவர்களை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக கைது செய்தது தமிழக அரசு. மாணவர்களை கைது செய்ததை கண்டித்து போராடிய மற்ற மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. தமிழ் நாட்டில் நாட்டில் இருந்துகொண்டு தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசியல் வாதிகளை குறை சொல்வதா இல்லை அவர்கள் செய்யும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் நம்மை போன்ற மக்களை குறை சொல்வதா என்றே தெரியவில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வீர தமிழர்களின் பரம்பரையில் வந்த நம் மக்களுக்கு உணர்சிகள் செத்துவிட்டதா என்ன?... அப்படியிருக்க வாய்ப்பே இல்லையே ஏன் என்றால் உணர்ச்சி செத்தவன் எல்லாவற்றையும் சகித்துகொள்வான். ஆனால் நம் தமிழ் மக்கள் அவ்வபோது போராட்டம் நடத்திக்கொண்டு தான் இருகிறார்கள். ஆனால் அந்த போராட்டம் எவ்வளவு உயர்ந்த காரணத்திற்காக என்று பார்த்தல் நம் மக்களின் மேன்மை நமக்கு புரிந்து விடும்.
"என் மதம் தான் பெரியது எப்படி எங்கள் மதத்தை தவறாக காட்டலாம்?" ...
" எங்கள் தலைவர் ரஜினி தான் பெரியவர் கமல் ரஜினியின் ஸ்டைலுக்கு முன்னால் நிற்கமுடியுமா?"...
"எங்கள் உலகநாயகன் தான் சிறந்தவர் கமலின் நடிப்பிற்கு முன்னால் ரஜினி தூசு"...
" எங்கள் தளபதி தான் சிறந்தவர் அதிக ஹிட் படங்களை கொடுத்துள்ளார் "...
"எங்கள் தல போல வருமா ?"...
மேலே உள்ளவைகளுக்காக தான் நம் மக்கள் தினமும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைபதிவுகளில் போராடி வருகின்றனர். இந்தகைய உயர்ந்த அவர்களின் கொள்கைகளில் அவர்கள் வென்று விட்டால் அவர்கள் ஜென்ம பலன் அடைந்தவர்களாகி விடுவார்கள். இதற்காக தான் நம் மக்கள் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். தமிழ் மொழி அழிந்துகொண்டு வந்தால் என்ன... தமிழர்கள் அழிந்தால் என்ன... தமிழ் மக்களின் நினைவு சின்னங்கள் அழிந்தால் என்ன... நம் மக்களுக்கு தேவை அவரவர்க்கு பிடித்த நடிகரின் படம் ஓட வேண்டும் அவரவரின் மதம் வளர வேண்டும்.
மக்களே சிந்தியுங்கள் பொழுதுபோக்கும் சினிமாவும் வேண்டாம் என்று சொலவில்லை. அவை மட்டுமே வாழ்கை என்று நினைப்பதை நிறுத்துங்கள். மூன்று மணிநேர படத்துக்காக உங்கள் மொத்த வாழ்க்கையையும் செலவழிக்காதீர்கள். உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை பாருங்கள் அது தவறில்லை ஆனால் அவர்களுக்காக உங்கள் வாழ்கையையும், நண்பர்களையும், உயிரையும் இழக்காதீர்கள். உங்கள் வாழ்கையை உங்களுக்காக வாழுங்கள். நாம் போராட வேண்டியது ரஜினி கமலுக்காக இல்லை நம் தமிழ் மொழிக்காக, நாம் போராட வேண்டியது விஜய் அஜித்திர்காக அல்ல நம் உடன்பிறவா சகோதரர்களாகிய நம் தமிழ் மக்களுக்காக, நாம் போராட வேண்டியது மதத்தின் வளர்சிக்காக அல்ல நம் தமிழ் நாட்டின் வளர்சிக்காக.....
சிந்திப்போம் செயல்படுவோம் இணைந்த கைகளால் இமையத்தையும் வெல்லலாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்புரிந்து வெற்றிக்கொடி நாடுவோம்......